Monday, February 7, 2011

யுத்தம் செய் - நூற்றாண்டின் முதல் மழை


பொதுவாக சினிமா என்பது காட்சிகளால் நிரப்பப்படுவது. பார்வையாளளின் மனதில் தேங்கும் உள்ளுணர்வுகளை ஒரு படைப்பாளி தன் படைப்பின் மூலம்
வெளிப்படுத்தி விட்டால் அது சிறந்த சினிமாவாக அங்கிகரிக்கப்படுகிறது. தற்போது நிலவி வரும் தமிழ் சினிமா படைப்புகள் அத்தகைய மரபில் கவனம் கொள்ளாமல் நாயகனுக்கு கதை, குத்துப் பாட்டு, இரட்டை அர்த்த வசனங்கள் என மீண்டு எழ முடியாத சூழலில் சிக்கிக் கொண்டுள்ளன. வருடத்தில் ஒன்றிரண்டு படங்கள் இந்த நியதியில் இருந்து விடுபட்டு படைப்பாளியின் தீவிரமான அணுகுமுறையால் இந்திய அளவில் கவனத்தை பெறுகின்றன. அந்த வரிசையில் சமிபத்தில் வெளியான "யுத்தம் செய்" படத்தை குறிப்பிடலாம். பழிக்குப் பழி அரதப் பழசான கதைக் கரு தான் இந்த படத்தின் கருவும். ஆனால் இயல்பான கதை மாந்தர்கள், நிஜத்திற்கு பொருத்தமான நடிப்பு, கதையோடு பேசும் வசனங்கள், நிதானமான தெள்ளிய திரைக்கதையின் மூலம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லரை லாவகமாக மிகவும் சாமர்த்தியமாக கையாண்டு தன் இயக்கத்தின் இருப்பை ஆரவாரமில்லாமல் நிருபித்துள்ளார் மிஷ்கின்.
சென்னையின் அந்த குறிப்பிட்ட சரகத்தில் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் தொடர்ந்து வெட்டப்பட்ட மனிதக் கைகள் அட்டைப் பெட்டியில் போடப்பட்டிருக்க,
கை சுத்தம் (லஞ்சம் வாங்காத) காரணமாக காவல் துறையிலிருந்து புலனாய்வுத் துறைக்கு விருப்ப பணி மாற்றலாகி வரும் ஜே.கே. எனும் சிபிசிஐடி ஆபிசர் சேரனிடம் இந்த கேஸ் கொடுக்கப்படுகிறது. வெட்டப்பட்ட கைகளை வைத்துக் கொண்டு விசாரணையை ஆரம்பிக்க, ஏற்கனவே காணாமல் போன தன் தங்கையின் கேஸை மீண்டும் ஓப்பன் செய்து விசாரிக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. இறுதியில் கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்யப்படுகிறார்கள்? கொலை செய்யப்படும் ஆட்களின்
பிண்ணனி என மிக விவரமாக, குழப்பமில்லாமல் சொல்லியிருக்கிறார்கள். தங்கை தொலைந்த சோகமும், விசாரணை நேரங்களில் வெளிப்படும் இறுக்க முகமும் என சேரனின் திறமைக்கு இத்திரைப்படம் ஒரு மைல்கல். பிணவறையில் முகத்தை கோட் போட்டு மூடிக் கொண்டு படுத்திருக்கும் டாக்டர் ஜூடாஸின் அறிமுகக் காட்சிகள் தமிழ் சினிமா உலகிற்கு புதிது. சேரனின் உதவியாளராய் வரும் தீப்திஷா, டி.எஸ்.பி. நரேன், அஸிஸ்டெண்ட் கமிஷ்னர் திரிசங்கு, ஒய்.ஜி.மகேந்திரன், அவர் மனைவி லஷ்மி, அவர்கள் பையன் என ஒவ்வொரு கதாப்பாத்திரமும் செதுக்கிய சிற்பங்களாக திரையில் வெளிப்படுகின்றன. சவக்கிடங்கு காட்சிகளும், உறைந்த நிர்வாண
பிணங்களும் இவ்வளவு நுணுக்கமாக எந்தத் திரைப்படங்களிலும் பதிவு செய்யப் படவில்லை. படத்தின் ஒவ்வொரு வினாடியும், ஒவ்வொரு காட்சியும் மிகத் தீவிரமான பரிசீலனைக்கும், திட்டமிடலுக்கும் பிறகே படமாக்கப்பட்டிருப்பதை படம் பார்க்கும் போது உணர முடிகிறது. வழக்கமான திரில்லர் படங்களில் படபடவென ஓடும் திரைக்கதையும், பார்வையாளனின் இமைகள் வலிக்க அலைபாயும் காமிரா கோணங்களும், குலைநடுங்க அதிர வைக்கும் இசையும், அலறல் ஒலிகளும் தான் பிரதானமாக இருக்கும். மாறாக இந்தப் படத்தில் காமிரா மெல்ல, நிதானித்து நம் ஆர்வத்தை அதிகமாக்கி கதைக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது. பலமான திரைக்கதைக்கு பக்கபலமாய் இருப்பது எடிட்டர் கெகின். பல இடங்களில் அந்த சூழ்நிலையின் சப்தங்களையே பின்னணி இசையாய் ஒலிக்க விட்டிருப்பதும், மௌனமாக நகரும் உன்னத காட்சிகளின் மூலமும் தனது தனித்தன்மையை இசையமைப்பாளர் கே சப்தம் போட்டு உணர்த்துகிறார். "கன்னித்தீவு பெண்ணா" பாடல் நதியில் துள்ளி விளையாடும் மீனைப் போல்
அமைதியான கதைக்கு ஆர்பாட்டமான பொழுதுபோக்கான நிமிடங்களாக அமைகிறது. புலனாய்வு இலாக்காவின் நிஜ விசாரனை எப்படி இருக்குமோ அப்படியே துல்லியமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. படத்தில் ஏற்றுக் கொள்ள முடியாதது அதன் மையக்கரு தான். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை படமாக்கப்பட்ட காட்சி அமைப்புகள் வன்முறையை பிரதானப்படுத்தியே கட்டமைக்கப்பட்டுள்ளன. ஒய்.ஜி.மகேந்திரன், மனைவி லஷ்மி, அவர்கள் பையன் என எல்லோரும் மொட்டை போட்டுக் கொண்டு பௌத்த துறவிகளை போல் எல்லாவற்றையும் துறந்து விட்டு கொலை வெறியோடு புறப்படுவது அதிகபட்ச வன்முறையை தூண்டுவதாகப் படுகிறது. டாக்டர் ஜூடாஸின் மரண வாக்குமூலமாக அமையும் அவரின் இறுதி வசனங்கள் வெளிப்படையான வன்முறைக்கு ஒரு வேண்டுகோளாக படமாக்கப்பட்டிருக்கிறது. இறுதிக் காட்சிகளில் சேரன் மௌனம் காப்பதும் அதீத வன்முறையின் குறியீடாகவே படுகிறது.
"யுத்தம் செய்" மிகப் பெரிய வெற்றிப் படமாக இடம் பிடிக்கும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் வளரும் கலைஞர்களுக்கு இந்தப் படம் ஒரு பாடம் என்பதில் சந்தேகமில்லை. அசலான நாம் ஒதுக்கி முடியாத மிகச் சிறந்த திரைப்படமாக இதனை என் வலைப்பதிவின் மூலம் உறுதி செய்கிறேன்....

No comments:

Post a Comment