Wednesday, October 12, 2011

அன்பின் அடையாளம்.

18-09-2011 ஞாயிறு அன்று என் வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று முடிந்தது. நம் யாவருக்கும் மணவாழ்வு என்பது மறக்க முடியாத தருணங்களில் ஒன்று. அந்த நாளில் தான் நம் சொந்தங்களும், நண்பர்களும் நம்மை கடவுளை போல பாவித்து நம்மை அலங்கரித்து, நம்மை உபசரித்து ஒரு கோலாகலமான திருவிழாவாக கொண்டாடுகின்றனர்.
அதுபோன்றதொரு அற்புதமான நேரத்தில் தான் முகமறியாத அந்த முகங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத சந்தோசத்தையும், அனுபவத்தையும் எனக்களித்தனர். அவர்கள் என் ட்விட்டுலக நண்பர்கள் கார்க்கி, பரிசல், வேதாளம், கேசவன், குள்ளபுஜ்ஜி. நேரில் சென்று அழைப்பு கொடுத்து வரவேற்கும் சராசரி உபசரிப்பைக் கூட அவர்களுக்கு நான் அளிக்கவில்லை. போனில் தொடர்பு கொண்டது மட்டும் தான். பரிசல் திருப்பூரில் இருந்து வந்திருந்தார். மற்ற நண்பர்கள் சென்னையிலிருந்து வந்திருந்தனர். என் வரவேற்பு நிகழ்ச்சியில் அவர்களைப் பார்த்த வினாடி எனக்கு பதற்றமே தொற்றிக் கொண்டது. கூட்ட நெரிசலில் அவர்கள் மெதுவாக மேடைக்கு
என்னை வந்தடைந்த சில வினாடிகளிலேயே எங்கள் சந்திப்பு முடிந்து விட்டது. எனக்காக அவர்களின் எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு நாள் முழுவதும் பயணம் செய்து என்னை சந்தித்தவர்களிடம் தனியாக இரண்டு நிமிடம் பேசக்கூட அவகாசம் கிடைக்கவில்லை. அந்த வருத்தம் இப்போதும் என்னை வருத்திக் கொண்டிருக்கிறது. இவர்கள் இப்போது எனக்கு ஏதோ உறவினர்கள் நெருக்கமான நண்பர்களாகி விட்ட உணர்வே ஏற்படுகிறது.
நேற்று கூட பரிசல் அண்ணனிடம் உரிமையோடு எனக்கான உதவிகளை தயங்காமல் கேட்டுப் பெற்றுக் கொண்டது இந்த உறவு முறையால் தான். நன்றி என்ற ஒற்றை சொல்லில் இவர்களின் நட்பை நான் ஈடுகட்டி விட முடியுமா என்ன???

இடமிருந்து வலம் : கார்க்கி, பரிசல், வேதாளம்@அர்ஜூன், கேசவன், குள்ளபுஜ்ஜி.


மணப்பெண்ணும், நானும்.



மணப்பெண்ணின் அம்மா, அப்பாவுடன்....


என் அம்மா, அப்பாவுடன்...


திரு. கே.ஈ. கிருஷ்ணமூர்த்தி, M.L.A. அவர்கள் (பருகூர் தொகுதி)


திரு. கே.பி. அன்பழகன் M.L.A. அவர்கள் (பாலக்கோடு தொகுதி)


திருமதி. மனோரஞ்சிதம் நாகராஜ், M.L.A அவர்கள் (ஊத்தங்கரை தொகுதி)

Tuesday, September 6, 2011

அன்புடன் அழைக்கிறேன்...

ஏறக்குறைய 15 வருடமாக வாசிக்கும் பழக்கம் இருந்தாலும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்து தான் இணைய எழுத்தின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. ஆயிரக்கணக்கான பதிவர்களும், ட்விட்டர்களும் மலை போல குவிந்திருக்க அதில் நானும் ஒரு எறும்பாக ஊர்ந்து கொண்டிருப்பதை பெருமையாகவே கருதுகிறேன்.
ஒரு வாசகனாக நான் இருக்கும் போது தினம்தினம் அனுபவத்தின் வெவ்வேறு விதமான வாசல்களை படைப்பாளியின் படைப்புகள் எனக்காக திறந்து கொண்டேயிருக்கின்றன. தீவிரமாக இயங்கும் ஒரு படைப்பாளி தான் அடையும் அவன் அடையும் கனவுகளை, ஆசைகளை, விருப்பு வெறுப்புகளை என யாவற்றையும் எழுத்தின் மூலமே கடக்க முயல்கிறான். தன் சுகதுக்கங்களை சுமந்தலையும் படைப்பை தாங்கிக் கொள்ள அவனுக்கு வாசகன் முக்கிய தேவையாக இருக்கிறான்.
ஆக குடும்ப அமைப்பு, உறவு முறைகளை விட தனித்துவமானதொரு பிணைப்பு கொண்டது தான் எழுத்தாளன் - வாசகன் எனும் உறவுமுறை. என்னைப் பொறுத்தவரை படைப்பதை விட படிப்பதில் தான் அலாதி சுகம். அதற்கு காரணங்கள் பல. இந்த உறவுமுறை தனித்துவமானது. அது பொன்னையோ, பொருளையோ எதிர்பார்க்காதது. வெறும் பகிர்தலை மட்டுமே கொண்டது. இந்த உறவு முறையில் மட்டுமே நமக்கு ஏமாற்றமற்ற வாழ்பனுபவம் கிடைக்கிறது. அந்த உறவு முறையை வலுவாக்கவும், புதுப்பிக்கவும் எனக்கொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

ஆம் வருகிற 18-09-2011 அன்று எனக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. (அழைப்பிதழ் பதிவின் கடைசியில்) முகமறியா உங்களின் எல்லோரின் அறிமுகங்களையும், ஆசிகளையும் எதிபார்க்கிறேன். இந்த அழைப்பை பதிவுக் கூட்டத்திலோ அல்லது ட்விட்டப்பிலோ முறைப்படி கொடுப்பதற்கான கால அவகாசம் இல்லாத காரணத்தால் பதிவிட்டு உங்களை அழைக்க வேண்டிய சூழ்நிலை. இந்த அழைப்பை நேரில் வைத்த அழைப்பாக ஏற்றுக் கொண்டு
தங்களின் வருகையையும், ஆசியையும் வேண்டுகிறேன். பயணம் குறித்த விபரங்களுக்கு எந்த நேரமும் என் அலைபேசி எண்ணில் என்னை தொடர்பு கொள்ளலாம்.

Shree Venkatachalapthi Namah
Devarajan & Kousalya Devarajan
( Sathish Medicals, Kalpana Complex – Uthangarai )


Request the pleasure of the company of
at the Wedding Reception of their beloved Son
D. Sathish Babu B.B.A., D.Pharm.,
( Sathish Medicals, Uthangarai )
to
E. Nithya M.C.A.,
Daughter of Sri. Elangovan & Kamatchi Elangovan


To be held on Sunday, 18th September 2011
between 11.30 AM and 2.30 PM
at
SVT Kalyana Mahal,
Uthangarai – 635 207
Krishnagiri Dist

Thursday, July 14, 2011

மந்திரக்காரன்...
















"சுஜாதா" இவரைப் பற்றி அறிமுகம் தேவையில்லை. என்னைப் பொறுத்தவரை பாரதிக்குப் பிறகு என்னை பாதித்த எழுத்தாளர்களில் முதன்மையானவர் அமரர் சுஜாதா. அவரை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் புதிதாய் பிறந்ததைப் போலவே உணர்கிறேன். அந்த எழுத்து நடையும், அதன் வசிகரமும் என் மனதிற்குள் எப்போதும் பெய்யும் மழைச்சாரல் தான். நாம் ஒரு நாவலுக்கோ, சிறுகதைக்கோ அல்லது ஒரு கவிதைக்கோ கூட அடிமையாகி விடக்கூடிய அபாயம் இருக்கிறது. அது போன்ற படைப்புகளும், படைப்பாளிகளும் நம் எண்ண அலைகளில் நிரந்தரமாக தங்கி விடுவார்கள். அதற்கான சாத்தியங்கள் நாவலுக்கும், சிறுகதைக்கும், கவிதைக்கும் உண்டு. மாறாக சுஜாதா தனது 'சுஜாதா பதில்கள்" எனும் கேள்வி-பதில் தொகுதியில் அதற்கான சாத்தியங்களை நமக்கு தருகிறார். நான் வாசித்த பல கேள்வி-பதில் தொகுதிகளில் கிடைக்காத பரவசம் இந்தத் தொகுதியில் கிடைத்தது. வாசிப்பனுக்கு அதிகபட்ச அனுபவத்தையும், வாசிப்பின் சுகத்தையும் தன் மாய வார்த்தைகளால் நமக்கு தருகிறார்.
உயிர்மை பதிப்பக வெளியீட்டில் மனுஷ்ய புத்திரனின் இதயம் கனக்கும் பதிப்புரையோடு தொடங்கும் தொகுதியில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன். கலை, இலக்கியம், அறிவியல், ஆன்மீகம், பொழுதுபோக்கு என அத்தனை துறைகளிலும் அவர் பெற்றிருக்கும் அறிவுஞானம் தனிவொரு மனிதனுக்கு சத்தியமாக சாத்தியமில்லை. இவர் அளித்திருக்கும் பதில்கள் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அந்தக் கேள்விக்கான மாற்று பதிலை முன்வைக்க முடியாது. இனி.............................

பதிப்புரை
-----------------------

சுஜாதா தன் மறைவிற்கு முன்னால் இறுதியாக எழுதிய கேள்வி-பதில் தொடர் இதுவே. குங்குமத்தில் வாராவாரம் எழுதிய இந்த கேள்வி-பதிகளில் சுஜாதாவின் இளமை குன்றாத துள்ளலும், கூர்மையும் எங்கெங்கும் பரவியிருக்கின்றன. மருத்துவமனையில் தனது இறுதி தினங்களில் மரணத்தோடு போராடிக் கொண்டிருந்த சந்தர்பத்தில் கூட தன் பதில்களை அனுப்பி வைத்தார். எந்த நிலையிலும் எழுத்தை மட்டுமே பற்றி நின்ற நம்முடைய காலத்தின் மாபெரும் கலைஞனின் ஆளுமையின் இயல்பு அது.
அவர் எழுதிய புத்தகத்தை அவருடைய முன்னுரையில்லாமல் கொண்டு வருவதை விட இதயத்தைக் கனக்கச் செய்வது வேறெதுவும் இல்லை. தன்னுடைய நூல்களை பதிப்பிப்பது தொடர்பாக எத்தனையோ இனிய நினைவுகளை தந்த சுஜாதா தான் எனக்கு இத்தகைய சந்தர்ப்பத்தையும் கொடுத்திருக்கிறார்.

மனுஷ்ய புத்திரன்
28-12-2009

உங்கள் எழுத்துக்களுக்கு ஆதர்சமாய் யாரைச் சொல்லலாம்?
எனக்கு முன் எழுதிய அனைவரையும்!

என் செல்போன் கேமரா 3.3 மெகா பிக்ஸெல்; என் கண்கள் எத்தனை மெகா பிக்ஸெல்?
மெகா என்பது பத்து லட்சம்; பிக்ஸெல் என்பது "பிக்சர் எலிமெண்ட்" என்பதின் சுருக்கம். இந்த பிக்ஸெல் ஸ்கேலை வைத்து கண்னை அளந்து 81 மெகா பிக்ஸெல்
என்று கணக்கு போட்டிருக்கிறார்கள். ஆனால், டிஜிட்டல் கேமரா போன்ற சாதனங்களோடு ஒப்பிடும் போது கண்களுக்கு பரந்த பகுதிகளை பார்க்கும் துல்லியம்
இல்லை. கேமரா வியூ ஃபைண்டரில் பார்ப்பதை விட கண்கள் அதிக பரப்பை பார்க்கிற மாதிரி தெரியும். அது, மூளை செய்கிற மாயா ஜாலம்.
சந்தேகமிருந்தால் சத்யாவின் இந்தப் பதிவில் (நானே போட்டுக்கிட்டது) ஒரு ஏரியாவை நோக்கி சுண்டுவிரலைக் காட்டி, விரலில் உங்கள் கண்களைப் பதித்தபடி ஒரு வரியாவது படிக்க முயன்று பாருங்கள்....
அம்பேல்!

"ஜெனரேஷன் கேப்" என்றால் என்னங்க?
ஒரு வயதானவரும், இளைஞனும் பஸ் பிடிக்க ஓடுவதைக் கவனியுங்கள். புரியும்.

இந்திய கிரிக்கெட் வாரியம் சம்பாதிக்கும் கோடிக்கணக்கான ரூபாய்கள் என்ன ஆகிறது?
போர்டு மெம்பர்கள் லண்டன் போய் ஷாப்பிங் செய்வதற்குப் பயன்படுகிறது. எப்போதாவது கிரிக்கெட் எனும் விளையாட்டின் மேம்பாட்டுக்குக் கொஞ்சம் தரப்படுகிறது.

பள்ளிகளில் செக்ஸ் கல்வி நடத்தும் பக்குவத்தை நாம் அடைந்து விட்டோமா?
சில பணக்காரப் பள்ளிகளில், அடைந்திருக்கிறோம். மற்றப் பள்ளிகளுக்கு தமிழ்த் திரைப்படங்கள் இருக்கவே இருக்கின்றன.

நிலா, வானம், அருவி, தென்றல், கடல்- இவை இடம்பெறாத காதல் கவிதை படித்ததுண்டா?
உண்டே... பாக்கியம் சங்கரின் இந்தக் கவிதையைப் படியுங்கள்.
பேருந்துப் பயணத்தின்
கசங்கிய வியர்வையுடன்
உன் மல்லிகை வாசம்
சசியை மறக்கடித்தது
உன்னில் மூழ்குகிறேன்
நசுங்கிய டப்பாவைப் போல
கிடக்கிறது காதலெனும் சொல்.

இன்னமும் தங்கள் மனத்திரையில் ஓடிக் கொண்டிருக்கும் மிகச் சிறந்த திரைப்படம் எது? ஏன்?
சத்யஜித் ராயின் பதேர்பாஞ்சாலி தான். வினோத மொழியில் ஆங்கில சப்டைட்டில்களுடன் ஓடிக் கொண்டிருந்தது. எழுந்து வந்துவிட இருந்தேன். ஒரு நிமிஷத்தில் என்னைக் கட்டிப் போட்டு உட்கார வைத்த மறக்க முடியாத சித்திரம்.

கடவுள், அறிவியல் - வித்தியாசப்படுத்துங்கள்...
கடவுள், அறிவியலின் கடைசிக் கேள்வியில் ஒளிந்து கொண்டிருக்கிறார்.

எந்த வட்டாரத்து பேச்சுத் தமிழ் தங்களைக் கவர்ந்திருக்கிறது?
திருநெல்வேலித் தமிழ் தான். "என்னடே" என்பதே மரியாதைச் சொல். புலியை அங்க வச்சுப் பார்த்தேன்" போன்ற வசிகரமான பிரயோகங்கள். எளிய ஜனங்களின் எளிய மனங்களின் வெளிப்பாடு.

நீங்கள் சமிபத்தில் ரசித்த சைவ ஜோக்?
"குற்றாலத்தில் குளிக்கச் சென்ற போது என்ன ஆச்சு தெரியுமோ? வேஷ்டி அவிழ்ந்து விட்டது."
"அய்யய்யோ! அப்புறம்?"
"நல்லவேளை, உள்ள டிராயர் போட்டிருந்தேன்"- சைவமாக ஜோக் சொல்ல வேண்டுமென்றால் இந்த மாதிரிதான் மொக்கையாக இருக்கும்.

தமிழகத்தின் மின் பற்றாக்குறையைச் சமாளிக்க நீங்கள் கூறும் யோசனைகள் என்ன?
1. காற்றையும், கடலையும் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வது.
2. மின்சாரம் கடத்துவதில் இழப்பைக் (Transmission loss) குறைப்பது.
3. Captive power சொந்த செலவில் சிறிய மின்சார உற்பத்தியை ஆதரிப்பது.
4. அறையில் யாரும் இல்லை என்றால் தானாக மின்சாரம் அணைவது.