Friday, December 28, 2018
Friday, December 21, 2018
வேண்டிக்கிடப்பது....
மருத்துவர் கண்களில் அடிக்கும் டார்ச் ஒளியைப் போல சுளீரென்று கண்களில் வந்திறங்கும் அதிகாலை சூரிய ஒளி,
பிடிவாதம் பிடிக்கும் சோம்பலோடு
கூட்டு சேரும் பனித்துளிகளும், போர்வையும்,
சேவல்களின், தென்னங் குருவிகளின், கட்டிய கன்றுகளின் என தினத்திற்கான அதிகாலை அலாரங்கள்,
இதற்காகவேணும் எனக்கு வேண்டும்....
நான் பிறந்த இந்த வீடு....
Thursday, December 20, 2018
நாடோடிக் குறிப்புகள்...
அதிகாலைக் குளிர் மெல்ல விலகிக்
கொண்டிருந்தது,
ஆறு வயதுப் பையன் விளையாடிக் களைத்த உறக்கத்தில் அழகாய் தெரிந்தான்,
அம்மாவும், அப்பாவும் காலத்தையும், கடவுளையும் மனதில் வசை பாடிக் கொண்டுந்தனர்,
அடையாள அட்டைகள், துணிமணிகள்,
தண்ணீர் பாட்டில் என யாவும் கூட சில கண்ணீர் துளிகளையும் தந்தனுப்பினாள் மனைவி,
பிழைப்பு தேடி பிழைக்க செல்பவர்களின் சுயசரிதைகள் என்றும் மாறுவதேயில்லை.
Wednesday, December 19, 2018
கேள்விகளால் ஆன உலகம்...
பத்து வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் கேட்கும் கேள்விகள் சுவாரஸ்யமும், புதிர்களும், அழகும், அர்த்தமும் நிறைந்தவைகள்.
வானில் தினம் உயிர்பெறும் நட்சத்திரங்களைப் போலவே குழந்தைகள் மனதிலும் தினம் தினம் கணக்கற்ற கேள்விகள் பிறந்து கொண்டேயிருக்கின்றன. குழந்தைகளாய் இருக்கும் போது வளரும் கேள்விகள் தான் நாம் பெரியவர்கள் ஆனவுடன் அதுவும் ஆசைகளாக வளர்ந்து விடுகிறதோ என்னவோ???!!!
Tuesday, December 18, 2018
சாப்ளின் உலகம்...
தினக்கவலையில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ள நகைச்சுவை என்பது நமக்கு தேவையாக இருக்கிறது.
கோபம், வெறுப்பு, அழுகை, துரோகம் என யாவற்றிலிருந்தும் விடுபட்டு ஒளிந்து கொள்ள நம்மை சிரிக்க வைப்பவர்கள்
நமக்கு தேவையாய் இருக்கிறார்கள்.
அதனால் தானோ என்னவோ கடவுளைப் போல சிரிக்க வைப்பவர்களை நாம் தினம் தினம் தேடிச் செல்கிறோம் போல 😌😌😌
Saturday, December 1, 2018
உயிர் உலகம்....
நான் பார்த்த வரையில் நிறைய பேர் அப்படித்தான், தன்னை கடித்துக் கொண்டிருக்கும் கொசுவை கொல்ல வேண்டும் என்றெல்லாம் நினைத்து அடிப்பதில்லை. சுளீறென்று வலிக்கும் போது சட்டென அந்த இடத்தில் அடிக்கிறோம். அன்றும் அப்படித்தான் அடித்தேன். மெல்ல மெல்ல அதன் உயிர் பிரிந்தது. என்றும் போல் அன்றும் உலகம் பரபரப்பாகவே இருந்தது.
Thursday, November 29, 2018
பரிவர்த்தனை....
அடிக்கடி நிகழும் அந்த சம்பவத்தைப் பற்றி நான் யாரிடமும் கூறியதேயில்லை, அப்படிச் சொல்லாததால் தான் அந்த சம்பவம் திரும்ப திரும்ப நடக்கிறதோ என்னமோ தெரியாது.
நடுநிசி கழிந்த அதிகாலைத் துவக்கத்தில் தான் தினம் வருகிறார், என்ன வேண்டும் என்ன வேண்டும் என்றே கேட்கிறார், சுயநலமற்ற வரத்திற்கு நான் எங்கே தவம் செய்வது????
Thursday, November 1, 2018
கலைகளின் உலகம்....
அந்த ஓவியத்தை மிகவும் அதிசயமாக பார்க்கிறான் அந்த மாணவன்,
மிகவும் கவனமாக, மிகவும் கனிவாக,
மிகவும் அக்கறையாக,மிகவும் பரிகாசமாக,
அவன் புத்தகப்பையை ஒரு கையிலும்,
அவன் பிஞ்சு விரல்களை மறுகையிலும்
பற்றிக் கொண்டு செல்லும் பள்ளி ஆசிரியர். என் பிராத்தனை எல்லாம் சில கணங்களாவது அது ஓவியம் என்பதை அவன் உணராமல் இருக்க வேண்டும்.
Wednesday, October 3, 2018
நாளைக்கானவை....
காலண்டரில் தேதி கிழிபட கிழிபட இறக்கும் இறந்த காலங்கள் கனவுகளாய் உருமாறி எதிர்காலத்தில் படிந்து விடுகிறது. நாளைக்கான நம் பெரும்பாலான தேவைகளை நம் இறந்த காலங்களே தீர்மானிக்கின்றன. கனவெல்லாம் இன்றைய காலகட்டத்தில் காணவேண்டியதில்லை, நாம் வளர்வது எப்படி இயல்போ அதைப்போலவே நம் தேவைகளோடு அதுவும் சேர்ந்து கொள்கிறது.
Sunday, September 30, 2018
நீர் உலகம்...
" டாடி இந்தா " என மகன் நீட்டிய ஒரு சொம்பு தண்ணீரில் என் முகம் பார்த்தேன். அலையலையாய், கலங்கலாய் பாதியழிந்த உருவமாய் என் முகம் அதில் காட்சியளித்தது.
எதிர்படும் யாவையும் அவன் சேமிக்கும் அன்பைப் போல அது சேகரித்துக் கொண்டே இருந்தது. அந்தக் கணம் அன்பைப் பெறுவதும், கொடுப்பதுமான பாடத்தை உலகம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது.
Tuesday, September 11, 2018
கற்றது வாழ்க்கை....
முதல் ஐந்து நாட்கள் அழுது கொண்டே செல்லும் குழந்தை அவளுக்கான பால்யத்தை மீட்டுத் தருகிறான்.
வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே பேருந்தில் அவன் கையசைக்கையில் அவளுக்கான பிரியத்தை மீட்டுத் தருகிறான்.
மாலை வீடு திரும்பும் வரை மீதம் சுமந்து வரும் மதிய சாப்பாட்டில் அவளுக்கான இயலாமையை மீட்டுத் தருகிறான்.
அவன் கற்கும் பாடப்புத்தகத்தில் மட்டும் அவள் கற்றுக் கொள்ள எப்போதும் விரும்பியதேயில்லை.
Tuesday, September 4, 2018
புதையுண்ட ஒரு ஆறு....
ஆறு வற்றிக் கொண்டிருந்த சமயம் பஞ்சம் பிழைக்க வெளிநாடு சென்றேன்,
சில வருடங்கள் கழித்து வந்து பார்த்தபோது மரங்களும், முட்புதர்களும் மண்டிக் கிடந்தது.
பிறகு சில வருடங்கள் கழித்து வந்து பார்த்தபோது விற்பனைக்கு வீட்டுமனைகளாக மாறி இருந்தது.
இப்போது நான் நின்று நெஸ்காஃபே சன்ரைஸ் குடித்துக் கொண்டிருக்கும் இந்த
14-வது மாடியின் அடித் தளத்தில்தான் அந்த ஆற்றின் வரலாறு புதைந்து கிடக்கிறது.
Thursday, August 30, 2018
காலத்தை புதுப்பிப்பவள்....
ஒரு அழுக்கு துணியை எடுப்பதுபோல்
நம் இறந்த காலங்களை எடுக்கிறாய்,
அதில் படிந்திருக்கும் அழுக்கைப் போல்
நம் மனக் கசப்புகளை பார்க்கிறாய்,
சோப்பு நீரில் ஊறும் துணியைப் போல்
அக் கசப்பை கண்ணீரில் நனைக்கிறாய்,
குமுக்கி, அடித்து துவைப்பது போல்
மன்னிப்பால் கசப்புகளை போக்குகிறாய்,
பளிச்சென்று காயும் துணியைப் போல்
நம் காலங்களை புதிதாக்குகிறாய்.
நம் இறந்த காலங்களை எடுக்கிறாய்,
அதில் படிந்திருக்கும் அழுக்கைப் போல்
நம் மனக் கசப்புகளை பார்க்கிறாய்,
சோப்பு நீரில் ஊறும் துணியைப் போல்
அக் கசப்பை கண்ணீரில் நனைக்கிறாய்,
குமுக்கி, அடித்து துவைப்பது போல்
மன்னிப்பால் கசப்புகளை போக்குகிறாய்,
பளிச்சென்று காயும் துணியைப் போல்
நம் காலங்களை புதிதாக்குகிறாய்.
Tuesday, August 28, 2018
அன்பின் வழித்தடங்கள்...
போதுமென்று எப்போதும் எனக்கு தோன்றியதேயில்லை,
நீ கொடுத்த அன்பு,
நீ கொடுத்த பரிவு,
நீ கொடுத்த தூய்மை,
நீ கொடுத்த நேசம், என
நீ கொடுத்த யாவும்
போதுமென்று எப்போதும் எனக்கு
தோன்றியதேயில்லை,
கொடுக்கும் உன் கரங்களும்
வாங்கும் என் கரங்களும் சோர்ந்திடுமா?
யானறியேன், ஆனால் நம் மனமிரண்டும்
சோர்ந்திடாது.
Saturday, August 25, 2018
நமக்கானவர்கள்.....
நட்போ, உறவோ
நமக்கான இயலாமையை, வருத்தத்தை, கோபத்தை, ஆற்றாமையை, ஏமாற்றத்தை யாரிடம் பரிகாசத்தோடு பதிவு செய்கிறோமோ, அவர்களே நம் உன்னதமானவர்கள். நாம் அவர்களிடம் எதிர்பார்ப்பது நம் பிரச்சனையின் புதிருக்கான விடையை மாத்திரமல்ல, அவர்கள் மட்டுமே நம் சொற்களை என்றைக்கும் சேகரித்து தாங்கிக் கொள்பவர்களாக இருக்கிறார்கள். வானம் பொழியும் மழையை பூமி தாங்குவது போல....
Thursday, August 23, 2018
பிரியத்துக்குரிவர்கள்....
மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது!!!
நீங்கள் யார் மீதும் எப்போதும் கோபம் கொள்வதில்லை, யார்மீதும் எந்தச் சூழ்நிலையிலும் வெறுப்பு கொள்வதில்லை. சபையோ, தனிமையோ ஒரு துளி கண்ணீரை சிந்துவதற்கு தயங்குவதேயில்லை. கிளையில் இருந்து உதிரும் இலையைப் போல, இறுதிவரை யார் மீதும் எந்தப் புகாரும் இல்லை. மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது!!!
Tuesday, August 21, 2018
பிரயத்தனங்கள்....
சமீபகாலமாக நான் தினமும் கவனிக்கிறேன், அந்தப் பெரியவரை.
கிழிந்த உடுப்பும், அந்தக் கிழிந்த உடையும்
அழுக்குகள் நிறைந்தும்,
கருணையும், கவலையும், நிராகரிப்பு மிதக்கும் கண்களும் தான் அவருக்கான அடையாளங்கள்.
இந்த உலகிடம் அவருக்கான கோரிக்கைகள் ஏதுமில்லை.
இயந்திர இரைச்சலோடு அவரின் இடைவிடாத முணுமுணுப்பு இறந்து கொண்டிருந்தது.
Tuesday, August 14, 2018
நிரம்பும் வாழ்வு....
இந்த வாழ்வை மிகவும் கடினமாக்கிக் கொள்கிறோம். ஆசைகள், கனவுகள், லட்சியங்கள், உறவுகள், நட்புகள், சமாதானங்கள், சச்சரவுகள், கேலிகள், கொண்டாட்டங்கள் என கிடைக்கும் மொத்தத்தையும் போட்டு அதில் அடைத்துக் கொள்கிறோம்.
வாழ்வை வெற்றிடமாக வைத்துக் கொள்ள பலரும் ( நானும் தான் ) தவறி விட்டோம். அதனால் தானோ என்னவோ இங்கு நம்மால் காற்றைப் போல, பஞ்சைப் போல சுதந்திரமாக இருக்கவும், பறக்கவும் முடியாமல் தோற்று விடுகிறோம்.
Monday, August 13, 2018
காத்திருக்கும் மலர்கள்...
பேருந்து நிலையமாக இல்லாவிட்டாலும்
அது முக்கிய பேருந்து நிறுத்தம் தான்.
ரோட்டின் ஓரத்தில் அவர் சுடும் பச்சி, போண்டா சுற்றியுள்ள நாலு மைல்களுக்கு பிரசித்தம். சுவையின் நீர்வீழ்ச்சி.
ஐந்து ரூபாய்க்கு என்ன மாதிரி பொடிபசங்களுக்கு மூணு கட்டி கொடுப்பார். கடலைமாவு அப்பிய பனியனோடும், எண்ணையும், வேர்வையும் வழியும் உடலோடு தான் எப்போதும் இருப்பார்.
நேற்றைக்கு முன்தினம் படுத்த படுக்கையாக சவப்பெட்டிற்குள் வைத்திருந்தார்கள். இன்றைக்கு அவரின் கடையருகே அவர் சவ ஊர்வலத்தின் காய்ந்த பூக்கள் மட்டுமே அவருக்காக காத்திருந்தன.
Friday, August 10, 2018
நம் கதைசொல்லிகள்.....
இன்றளவும் நம் தாத்தா, பாட்டிகளைப் போல் நினைத்த மாத்திரத்தில் ஒரு கதையை நேர்த்தியான திரைக்கதை ஒழுங்கோடு சொன்ன திரைக்கதை ஆசிரியர்கள் யாருமில்லை.
அவர்கள் நினைவு மொத்தமும் கடந்த காலக்கதைகள் நிரம்பி வழியும் ஊரூற்று.
ஒரு சொல்லை அல்லது நிகழ்வை பிடித்து குழந்தைகளை ஈர்க்கும் அந்த அடையாளங்கள் நமக்கு பிறகான தலைமுறைக்கு என்றுமே கிடைக்கப்பெறாது.
Monday, July 30, 2018
வாழ்விலக்கியம்.....
யாரிடமும் சமாதானம் அடைந்து கொள்பவர்களையும்,
யாரிடமும் தோற்றுக் கொண்டே
இருப்பவர்களையும்,
யாரிடமும் எதையும் எதிர்பாரமல்
இருப்பவர்களையும்,
எதற்கும், எப்போதும் ஆசைப்படாமல்
இருப்பவர்களையும்,
வெறுப்பவர்களிடமும் அன்பு காட்டிக்
கொண்டிருப்பவர்களையும்,
தான் இந்த உலகம் மடிமேல் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்கிறது, நான் படித்த இலக்கியம் எனக்கு கற்றுத் தராதது.
Thursday, July 26, 2018
நசுங்கும் வாழ்வு....
இந்த உலகம் பதில் தரமுடியாத பல
கேள்விகளின் குவியல்களாக இருக்கிறது.
அதனால் தானோ என்னவோ நம் வாழ்வை
வாழ்வதற்கே சில சமயம் அலுப்பாகவும், வெறுப்பாகவும், பயமாகவும் இருக்கிறது. நேற்று வாழ்வில் ஜெயித்தவர்கள்
இன்று எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. காலம் வேகம் எடுக்க நல்லவை, கெட்டவை என யாவும் மிதிபட்டு ஒன்றாகி விடுகின்றன.
Wednesday, July 25, 2018
அற்ப வாழ்வு.....
நம் கண்கள் அளவே இருந்த அந்த வண்ணத்துப்பூச்சி, அன்பின் இருக்கை தேடி அலைந்து கொண்டிருந்தது.
பல வனங்கள், பல காடுகள்,
பல ஆறுகள், பல நதிகள்,
பல மலைகள், பல பள்ளத்தாக்குகள்,
பல நகரங்கள், பல கிராமங்கள்,
பல குடும்பங்கள், இறுதியாய் ஒரே ஒரு ஒற்றை மனது என பார்த்து ஏங்கி தோல்வியுற்று உயர உயர பறந்த அந்த வண்ணத்துப் பூச்சி பற்றியெரியும் சூரியனிடம் சென்று சாம்பலாகிப்போனது.
Tuesday, July 24, 2018
நாள் மாற்றம்.....
இன்றைக்கு போலல்லாமல்
என்றைக்கும் உங்களுக்கு பிடித்தவனாகவே இருக்க விரும்புகிறேன்,
ஆனால் என்றைக்கும் இன்றைக்கு
போலல்லாமல் இருந்தால் மட்டுமே உங்களுக்கு என்னை பிடிக்கும்.
என்றைக்குமான நாட்களை முதலில் தக்கவைத்துக் கொள்வோம். இன்றைக்கான நாளை பிறகு என்றைக்காவது நாம் விரும்பும்படி மாற்றிக் கொள்வோம்.
Monday, July 16, 2018
நினைவின் சுவடுகளில்....
அனுபவத்தின் பெருவெளிகள் நமக்கு பால்யத்தில் மட்டுமே கிடைக்கின்றன.
சந்தோசம், ஏக்கம், படபடப்பு, அழுகை, சிரிப்பு, போட்டி, பொறாமை என சராசரி மனித இயல்புகள் யாவும் அப்பருவத்தில் தான் நம்மிடம் வந்தடைகின்றன.
பெரியவர்களின் மனதில் என்றைக்குமான புதுக்கவிதையாக எல்லோருக்கும் தங்கள் சிறார்பருவம் நிச்சயம் இருக்கும்.
Friday, July 13, 2018
எனக்கானவை....
பசியோடு இரவெல்லாம் பயணம்,
கை, கால்கள் உணர்விழந்த நிலை,
லட்சத்திற்கும் மேற்பட்ட தலைகளோடு
கலந்து விடுகிறது, எங்கள் தலைகளும்.
ஊர்ந்து, தடுக்கி, தவழ்ந்து, காத்திருந்து
இறுதியாய் கண்டடைந்தோம்
உனக்கான கடவுளையும், அதில்
எனக்கான கலையையும்.
நீ கடவுளிடம் யாசித்துக் கொள்,
நான் கலையை ரசித்துக் கொள்கிறேன்.
Thursday, July 12, 2018
வாழ்வின் அழகியல்
காலை எழுந்து குளித்து முடித்து எல்லா ஒழுக்குகளுடனும் இந்த உலகிற்கு
நம் முகத்தை அறிமுகம் செய்து வைத்துக் கொள்கிறோம்.
ஏமாற்றுபவர்களை ஏமாற்றி,
பாராட்டுபவர்களை பாராட்டி,
சிரிப்பவர்களிடம் சிரித்து,
அழுபவர்களிடம் அழுது,
வேண்டுபவர்களிடம் வேண்டி
என நமக்கான காரியத்தை முடித்து
தற்காலிக இறப்பு எனும் இரவிற்குள்
அடைந்து கொள்கிறோம்.
தூய அன்பு தினம் பூத்து உதிரும் மலரைப்
போல எப்போதும் இருக்கிறது.
Monday, July 9, 2018
சுயத்தை இழத்தல்....
இயல்பான கோபத்தை,
வெறுப்பை, நிராகரிப்பை, வேண்டுதலை, உரிமைகளை, மாற்றத்தை
என சராசரியான ஒருவனின் உணர்வுகளை இந்த சமூகம் சார்ந்து வாழ்பவர்கள் ஏற்றுக் கொள்வதேயில்லை. அதிகாரத்தாலும், அறிவுரைகளாலும், அவர்களை அவர்களாக இருக்க அனுமதிப்பதேயில்லை.
நம் இனத்தின் பெருஞ்சாபமும், பின்னடைவும் அதுவே.
Saturday, July 7, 2018
காட்சி உலகம்....
வேடிக்கை பார்ப்பவர்களின் உலகம்
விசித்திரங்களால் நிரம்பியது.
அவர்களின் மனம் முழுவதுமே அனுபவங்களால் நிரம்பிய அற்புதக் குவியல்.
விபத்து, அழுகை, சிரிப்பு, திருட்டு என அவர்கள் கண்முன்னே நடக்கும் அத்தனை சம்பவங்களும் அவர்களுக்கு வெறும் காட்சியே.
கடவுளுக்கும் அது பிடித்ததாலோ என்னவோ எப்போதும் இந்த உலகை
வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார்.
Thursday, July 5, 2018
மிதக்கும் உலகம்.....
திரும்ப திரும்ப தோல்விகளை சந்திக்க
நேரிடும் நேரத்தில்,
மிதக்கும் மேகம் வரை கோபம்
கொப்பளிக்கும் கணத்தில்,
விளக்கங்கள் கொடுக்காமல் விலகிச்
செல்லும் விரக்தியான வினாடிகளில்,
எப்போதாவது வழியும் கண்ணீரை தானே துடைத்துக் கொள்ளும் தருணத்தில்,
"டாடி விளையாடலாமா"??? என மகன்
கேட்கும் பொழுது எனக்கான உலகத்தை சற்று வேறு பக்கம் திருப்பி விடுகிறான்.
Subscribe to:
Posts (Atom)