Friday, December 28, 2018


                        அன்பினால்....



வார்த்தைகள் மெளனம் காக்கும்,
உணர்ச்சிகள் உயிரற்று போகும்,
உணர்வுகள் பெருக்கெடுத்து ஓடும்,
காலங்கள் கசப்பானவை ஆகும்,
கணங்கள் கண்ணீராக கரையும்,
பிரியங்கள் பிண்ணிப் பிணையும்,
அன்பின் ஆறுதலையும், அவசியத்தையும்
உணரவாவது வேண்டும்
உனக்கும், எனக்குமான பிரிவென்பது....

Sunday, December 23, 2018


             முதன்மையானவன்....


எக்காலத்திற்கும், எப்போதும் இவன் குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கும். மனிதமும், நேசமும், தன் உழைப்புமே தன்மானம், வாழ்வின் அடையாளம், அர்த்தம் என போதித்த ஆசானுக்கு வீரவணக்கம் 🙏🙏🙏

Saturday, December 22, 2018


               நமக்கானவைகள்....



என்னைப் பற்றிய உண்மைகள் உங்களுக்கு எப்போதும் கசப்பையே ஏற்படுத்துகின்றன.
திசைகள் என்ற ஒற்றைப் புள்ளியில் இருந்து நான்காய் பிரிபவர்கள் நாம்,
இயற்கையில் நீங்கள் வேண்டுமானால் மாமழையாய் பொழியலாம்.
நமக்கான உடைந்த வார்த்தைகளை
உங்கள் பெருமழையோடு ஏற்கும் பூமியாய்
நமக்கான நல் இறந்த காலங்கள்.

Friday, December 21, 2018



               வேண்டிக்கிடப்பது....



மருத்துவர் கண்களில் அடிக்கும் டார்ச் ஒளியைப் போல சுளீரென்று கண்களில் வந்திறங்கும் அதிகாலை சூரிய ஒளி,
பிடிவாதம் பிடிக்கும் சோம்பலோடு
கூட்டு சேரும் பனித்துளிகளும், போர்வையும்,
சேவல்களின், தென்னங் குருவிகளின், கட்டிய கன்றுகளின் என தினத்திற்கான அதிகாலை அலாரங்கள்,
இதற்காகவேணும் எனக்கு வேண்டும்....
நான் பிறந்த இந்த வீடு....

Thursday, December 20, 2018


   நாடோடிக் குறிப்புகள்...



அதிகாலைக் குளிர் மெல்ல விலகிக்
கொண்டிருந்தது,
ஆறு வயதுப் பையன் விளையாடிக் களைத்த உறக்கத்தில் அழகாய் தெரிந்தான்,
அம்மாவும், அப்பாவும் காலத்தையும், கடவுளையும் மனதில் வசை பாடிக் கொண்டுந்தனர்,
அடையாள அட்டைகள், துணிமணிகள்,
தண்ணீர் பாட்டில் என யாவும் கூட சில கண்ணீர் துளிகளையும் தந்தனுப்பினாள் மனைவி,
பிழைப்பு தேடி பிழைக்க செல்பவர்களின் சுயசரிதைகள் என்றும் மாறுவதேயில்லை. 

Wednesday, December 19, 2018


       கேள்விகளால் ஆன உலகம்...



பத்து வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் கேட்கும் கேள்விகள் சுவாரஸ்யமும், புதிர்களும், அழகும், அர்த்தமும் நிறைந்தவைகள்.
வானில் தினம் உயிர்பெறும் நட்சத்திரங்களைப் போலவே குழந்தைகள் மனதிலும் தினம் தினம் கணக்கற்ற கேள்விகள் பிறந்து கொண்டேயிருக்கின்றன. குழந்தைகளாய் இருக்கும் போது வளரும் கேள்விகள் தான் நாம் பெரியவர்கள் ஆனவுடன் அதுவும் ஆசைகளாக வளர்ந்து விடுகிறதோ என்னவோ???!!!

Tuesday, December 18, 2018


              சாப்ளின் உலகம்...



தினக்கவலையில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ள நகைச்சுவை என்பது நமக்கு தேவையாக இருக்கிறது.
கோபம், வெறுப்பு, அழுகை, துரோகம் என யாவற்றிலிருந்தும் விடுபட்டு ஒளிந்து கொள்ள நம்மை சிரிக்க வைப்பவர்கள்
நமக்கு தேவையாய் இருக்கிறார்கள்.
அதனால் தானோ என்னவோ கடவுளைப் போல சிரிக்க வைப்பவர்களை நாம் தினம் தினம் தேடிச் செல்கிறோம் போல 😌😌😌

Saturday, December 1, 2018


                   உயிர் உலகம்....



நான் பார்த்த வரையில் நிறைய பேர் அப்படித்தான், தன்னை கடித்துக் கொண்டிருக்கும் கொசுவை கொல்ல வேண்டும் என்றெல்லாம் நினைத்து அடிப்பதில்லை. சுளீறென்று வலிக்கும் போது சட்டென அந்த இடத்தில் அடிக்கிறோம். அன்றும் அப்படித்தான் அடித்தேன். மெல்ல மெல்ல அதன் உயிர் பிரிந்தது. என்றும் போல் அன்றும் உலகம் பரபரப்பாகவே இருந்தது.

Thursday, November 29, 2018


                     பரிவர்த்தனை....



அடிக்கடி நிகழும் அந்த சம்பவத்தைப் பற்றி நான் யாரிடமும் கூறியதேயில்லை, அப்படிச் சொல்லாததால் தான் அந்த சம்பவம் திரும்ப திரும்ப நடக்கிறதோ என்னமோ தெரியாது.
நடுநிசி கழிந்த அதிகாலைத் துவக்கத்தில் தான் தினம் வருகிறார், என்ன வேண்டும் என்ன வேண்டும் என்றே கேட்கிறார், சுயநலமற்ற வரத்திற்கு நான் எங்கே தவம் செய்வது????

Monday, November 19, 2018


                     கட்டளை உலகம்....


நாம் முதலில் பிறப்பதற்கான ஆதாரக்
காரணமே யாரோ முன்னவரின் கட்டளைகளால் கடமைக்கப்படுகிறது,
யாரோ முன்னவரின் கட்டளைகளால்
வளர்கிறோம், படிக்கிறோம், சம்பாதிக்கிறோம், முன்னவர் போலவே
நாமும் கல்யாணம் செய்து கொண்டு,
முன்னவர் போலவே நாமும் கட்டளையிட கற்றுக் கொள்கிறோம்.

Thursday, November 1, 2018


             கலைகளின் உலகம்....


அந்த ஓவியத்தை மிகவும் அதிசயமாக பார்க்கிறான் அந்த மாணவன்,
மிகவும் கவனமாக, மிகவும் கனிவாக,
மிகவும் அக்கறையாக,மிகவும் பரிகாசமாக,
அவன் புத்தகப்பையை ஒரு கையிலும்,
அவன் பிஞ்சு விரல்களை மறுகையிலும்
பற்றிக் கொண்டு செல்லும் பள்ளி ஆசிரியர். என் பிராத்தனை எல்லாம் சில கணங்களாவது அது ஓவியம் என்பதை அவன் உணராமல் இருக்க வேண்டும்.

Wednesday, October 31, 2018


           அன்பை யாசித்தல்....


யாவும் இழந்து,
யாவரும் பிரிந்து,
கர்வம் அழிந்து,
ஞானம் பிறந்து,
ஆற்றல் வற்றி,
அகந்தை குறைந்து

நிறகதியாய் நிற்கும்
கடவுளின் கதி வந்தடைகிறது,
மாமழையாய் பொழியும் ஒரு துளி
அன்பை வேண்டி நிற்கையில்....

Wednesday, October 3, 2018


                  நாளைக்கானவை....



காலண்டரில் தேதி கிழிபட கிழிபட இறக்கும் இறந்த காலங்கள் கனவுகளாய் உருமாறி எதிர்காலத்தில் படிந்து விடுகிறது. நாளைக்கான நம் பெரும்பாலான தேவைகளை நம் இறந்த காலங்களே தீர்மானிக்கின்றன. கனவெல்லாம் இன்றைய காலகட்டத்தில் காணவேண்டியதில்லை, நாம் வளர்வது எப்படி இயல்போ அதைப்போலவே நம் தேவைகளோடு அதுவும் சேர்ந்து கொள்கிறது.

Sunday, September 30, 2018


நீர் உலகம்...


 
" டாடி இந்தா " என மகன் நீட்டிய ஒரு சொம்பு தண்ணீரில் என் முகம் பார்த்தேன். அலையலையாய், கலங்கலாய் பாதியழிந்த உருவமாய் என் முகம் அதில் காட்சியளித்தது.
எதிர்படும் யாவையும் அவன் சேமிக்கும் அன்பைப் போல அது சேகரித்துக் கொண்டே இருந்தது. அந்தக் கணம் அன்பைப் பெறுவதும், கொடுப்பதுமான பாடத்தை உலகம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது.

Wednesday, September 26, 2018


                கட்டளைப் பருவம்....



வீட்டில் :
சீக்கிரம் எழு,
சட்டுனு குளி,
பட்டுனு சாப்பிடு,
வேகமா நட,
பத்திரமா பஸ் ஏறு,
பள்ளியில் :
விளையாடாம படி,
மனப்பாடம் பண்ணு,
அழகா எழுது,
மறுபடியும் வீட்டில் :
பட்டுனு சாப்பிடு,
சீக்கிரம் தூங்கு
வளரும் குழந்தைகளின் நிகழ்காலங்கள்
நம் கட்டளைகளால் கட்டமைக்கப்படுகின்றன 😌😢😫🤯

Monday, September 24, 2018


          உலகம் தரும் உன்னதம்....



வாழ்வே வெறுப்பாய்,
வாழ்தலே அசிங்கமாய்,
மனிதர்களே மிருகங்களாய்,
எதிலும் பற்றற்று,
எங்கும் சலிப்புற்று,
எப்போதும் விவேகமற்று,
மனமே கணமாய்,
ஆசையே பாரமாய்,
தோல்வியே துணையாய்
என பசியோடு தனித்திருக்கையில் இந்த உலகம் யாவையும் கொடுத்து
விடுகிறது.

Thursday, September 20, 2018


   
                   சுழலும் உலகம்...



இந்த உலகம் முழுமையும் இருளில் நிறைந்து இருக்கும் வர்ணங்களைப் போல நம் எண்ணங்களில் அடங்காதவையாகவும், நம் புரிதலில் இருந்து விலகியதாகவும் தான் இருக்கிறது. இயற்கை சுற்றிவிட்ட பம்பரம் போல் நாம் இன்னமும் இங்கு சுழன்று கொண்டேயிருப்பது இன்னும் இன்னும் ஆச்சரியம்.

Tuesday, September 11, 2018


              கற்றது வாழ்க்கை....



முதல் ஐந்து நாட்கள் அழுது கொண்டே செல்லும் குழந்தை அவளுக்கான பால்யத்தை மீட்டுத் தருகிறான்.
வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே பேருந்தில் அவன் கையசைக்கையில் அவளுக்கான பிரியத்தை மீட்டுத் தருகிறான்.
மாலை வீடு திரும்பும் வரை மீதம் சுமந்து வரும் மதிய சாப்பாட்டில் அவளுக்கான இயலாமையை மீட்டுத் தருகிறான்.
அவன் கற்கும் பாடப்புத்தகத்தில் மட்டும் அவள் கற்றுக் கொள்ள எப்போதும் விரும்பியதேயில்லை.

Saturday, September 8, 2018


      செம்மொழியாம் தமிழ்மொழி...



What is your mother tongue?
My mother tongue is tamil.

"என் தாய்மொழி தமிழ்" என்பதைக்கூட ஆங்கிலத்தில் தான் அறிந்து கொள்கிறார்கள்.

Tuesday, September 4, 2018


              புதையுண்ட ஒரு ஆறு....



ஆறு வற்றிக் கொண்டிருந்த சமயம் பஞ்சம் பிழைக்க வெளிநாடு சென்றேன்,
சில வருடங்கள் கழித்து வந்து பார்த்தபோது மரங்களும், முட்புதர்களும் மண்டிக் கிடந்தது.
பிறகு சில வருடங்கள் கழித்து வந்து பார்த்தபோது விற்பனைக்கு வீட்டுமனைகளாக மாறி இருந்தது.
இப்போது நான் நின்று நெஸ்காஃபே சன்ரைஸ் குடித்துக் கொண்டிருக்கும் இந்த
14-வது மாடியின் அடித் தளத்தில்தான் அந்த ஆற்றின் வரலாறு புதைந்து கிடக்கிறது.

Thursday, August 30, 2018


   
           காலத்தை புதுப்பிப்பவள்....




ஒரு அழுக்கு துணியை எடுப்பதுபோல்
நம் இறந்த காலங்களை எடுக்கிறாய்,
அதில் படிந்திருக்கும் அழுக்கைப் போல்
நம் மனக் கசப்புகளை பார்க்கிறாய்,
சோப்பு நீரில் ஊறும் துணியைப் போல்
அக் கசப்பை கண்ணீரில் நனைக்கிறாய்,
குமுக்கி, அடித்து துவைப்பது போல்
மன்னிப்பால் கசப்புகளை போக்குகிறாய்,
பளிச்சென்று காயும் துணியைப் போல்
நம் காலங்களை புதிதாக்குகிறாய்.

Tuesday, August 28, 2018


         அன்பின் வழித்தடங்கள்...


போதுமென்று எப்போதும் எனக்கு தோன்றியதேயில்லை,
நீ கொடுத்த அன்பு,
நீ கொடுத்த பரிவு,
நீ கொடுத்த தூய்மை,
நீ கொடுத்த நேசம், என
நீ கொடுத்த யாவும்
போதுமென்று எப்போதும் எனக்கு
தோன்றியதேயில்லை,
கொடுக்கும் உன் கரங்களும்
வாங்கும் என் கரங்களும் சோர்ந்திடுமா?
யானறியேன், ஆனால் நம் மனமிரண்டும்
சோர்ந்திடாது.


                 கனவின் மொழி....


பேரமைதியின் உள்ளே தாண்டவமாடிக்
கொண்டிருக்கும் உன் கனவுகளைக் கேள்,
அதன் மொழியைப் புரிந்து கொள்,
அதன் உணர்வைப் புரிந்து கொள்,
அதன் கட்டளையைப் புரிந்து கொள்,
அதன் கட்டமைப்பை புரிந்து கொள்,
அதை ஒருபோதும் உன்னிடம் இருந்து
துண்டித்துக் கொள்ளாதே,
அஃது ஒன்றே நம் வாழ்வியல்.

Saturday, August 25, 2018


                  நமக்கானவர்கள்.....



நட்போ, உறவோ
நமக்கான இயலாமையை, வருத்தத்தை, கோபத்தை, ஆற்றாமையை, ஏமாற்றத்தை யாரிடம் பரிகாசத்தோடு பதிவு செய்கிறோமோ, அவர்களே நம் உன்னதமானவர்கள். நாம் அவர்களிடம் எதிர்பார்ப்பது நம் பிரச்சனையின் புதிருக்கான விடையை மாத்திரமல்ல, அவர்கள் மட்டுமே நம் சொற்களை என்றைக்கும் சேகரித்து தாங்கிக் கொள்பவர்களாக இருக்கிறார்கள். வானம் பொழியும் மழையை பூமி தாங்குவது போல....

Friday, August 24, 2018


         நிறம் மாறிய வாழ்க்கை....


உழைத்து உறங்குபவனின் உறக்கம்,
ஆடு மேய்ப்பவனின் சுதந்திரம்,
வாசிப்பில் கரையும் முதுமையின் நாட்கள்,
அடுத்தவருக்கு பிரார்திக்கும் மனித மனம்,
சாலையோரம் வாழ்பவர்களின் வாழ்க்கை,
என நம் அடிப்படை தேவைகளின் மேல் ஆசையெனும் குப்பைகள்தான் நிரம்பியிருக்கின்றன.

Thursday, August 23, 2018


           பிரியத்துக்குரிவர்கள்....



மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது!!!
நீங்கள் யார் மீதும் எப்போதும் கோபம் கொள்வதில்லை, யார்மீதும் எந்தச் சூழ்நிலையிலும் வெறுப்பு கொள்வதில்லை. சபையோ, தனிமையோ ஒரு துளி கண்ணீரை சிந்துவதற்கு தயங்குவதேயில்லை. கிளையில் இருந்து உதிரும் இலையைப் போல, இறுதிவரை யார் மீதும் எந்தப் புகாரும் இல்லை. மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது!!!

Tuesday, August 21, 2018


                  பிரயத்தனங்கள்....



சமீபகாலமாக நான் தினமும் கவனிக்கிறேன், அந்தப் பெரியவரை.
கிழிந்த உடுப்பும், அந்தக் கிழிந்த உடையும்
அழுக்குகள் நிறைந்தும்,
கருணையும், கவலையும், நிராகரிப்பு மிதக்கும் கண்களும் தான் அவருக்கான அடையாளங்கள்.
இந்த உலகிடம் அவருக்கான கோரிக்கைகள் ஏதுமில்லை.
இயந்திர இரைச்சலோடு அவரின் இடைவிடாத முணுமுணுப்பு இறந்து கொண்டிருந்தது.

Saturday, August 18, 2018


   இயற்கையெனும் கைக்குழந்தை....


 மனிதனெனும் அற்ப உயிர்களான நாம் தோளில் இருக்கும் துண்டை உதறுவது போல், இயற்கை கோபித்துக் கொண்டு தன்னுடலை சற்று குழுக்கினால் நம் வாழ்வியல் மொத்தமும் நிலைகுழைந்து விடுகின்றன. புதுமையின் எத்தனை உயரம் தொட்டாலும் இயற்கையெனும் குழந்தையை நம்மால் சமாதானப்படுத்த முடியவில்லை 😔😔😔

Tuesday, August 14, 2018


                     நிரம்பும் வாழ்வு....


இந்த வாழ்வை மிகவும் கடினமாக்கிக் கொள்கிறோம். ஆசைகள், கனவுகள், லட்சியங்கள், உறவுகள், நட்புகள், சமாதானங்கள், சச்சரவுகள், கேலிகள், கொண்டாட்டங்கள் என கிடைக்கும் மொத்தத்தையும் போட்டு அதில் அடைத்துக் கொள்கிறோம்.
வாழ்வை வெற்றிடமாக வைத்துக் கொள்ள பலரும் ( நானும் தான் ) தவறி விட்டோம். அதனால் தானோ என்னவோ இங்கு நம்மால் காற்றைப் போல, பஞ்சைப் போல சுதந்திரமாக இருக்கவும், பறக்கவும் முடியாமல் தோற்று விடுகிறோம்.

Monday, August 13, 2018

காத்திருக்கும் மலர்கள்...



பேருந்து நிலையமாக இல்லாவிட்டாலும்
அது முக்கிய பேருந்து நிறுத்தம் தான்.
ரோட்டின் ஓரத்தில் அவர் சுடும் பச்சி, போண்டா சுற்றியுள்ள நாலு மைல்களுக்கு பிரசித்தம். சுவையின் நீர்வீழ்ச்சி.
ஐந்து ரூபாய்க்கு என்ன மாதிரி பொடிபசங்களுக்கு மூணு கட்டி கொடுப்பார். கடலைமாவு அப்பிய பனியனோடும், எண்ணையும், வேர்வையும் வழியும் உடலோடு தான் எப்போதும் இருப்பார்.
நேற்றைக்கு முன்தினம் படுத்த படுக்கையாக சவப்பெட்டிற்குள் வைத்திருந்தார்கள். இன்றைக்கு அவரின் கடையருகே அவர் சவ ஊர்வலத்தின் காய்ந்த பூக்கள் மட்டுமே அவருக்காக காத்திருந்தன.

Saturday, August 11, 2018


             மிதக்கும் சொற்கள்....



என் பிரியங்களை,
என் பேரன்பை,
என் பெருங்கோபத்தை,
என் பரிதவிப்பை,
என் இயலாமையை, என
என் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு
பதிலுக்கு நீ கொடுத்த வார்த்தைகளை வைத்துக் கொண்டு தான் இந்த உலகில் விளையாடிக் கொண்டிருக்கிறேன்.

Friday, August 10, 2018


              நம் கதைசொல்லிகள்.....



இன்றளவும் நம் தாத்தா, பாட்டிகளைப் போல் நினைத்த மாத்திரத்தில் ஒரு கதையை நேர்த்தியான திரைக்கதை ஒழுங்கோடு சொன்ன திரைக்கதை ஆசிரியர்கள் யாருமில்லை.
அவர்கள் நினைவு மொத்தமும் கடந்த காலக்கதைகள் நிரம்பி வழியும் ஊரூற்று.
ஒரு சொல்லை அல்லது நிகழ்வை பிடித்து குழந்தைகளை ஈர்க்கும் அந்த அடையாளங்கள் நமக்கு பிறகான தலைமுறைக்கு என்றுமே கிடைக்கப்பெறாது.

Tuesday, August 7, 2018


          பேரன்பின் விகிதஙகள்....


அன்பின் மிக மிக மிக அருகாமையிலும், நெருக்கத்திலும் இருப்பவர்களால் மட்டுமே நமக்கான இழப்புகளையும், ஏமாற்றங்களையும், வலியையும் ஏற்றுக் கொள்ள முடியும்.
எல்லாம் கழிந்து இறுதியில் மனிதம் எனும் ஆன்மாவிடம் எஞ்சி நிற்பது அன்பு மட்டுமே.

Friday, August 3, 2018


                  அம்மா உலகம்......



"பக்கமா இருக்கு தொட்டுடலாம்" என
நினைத்து வானில் தெரியும் நட்சத்திரங்களை பார்த்து குழந்தை
கைகளை தூக்கி ஏமாற்ந்த கணம்,
தனக்கான வானமாய் இருக்கும்
தன் அன்னை மடியில் வந்து அமர்ந்து கொண்டது.

Wednesday, August 1, 2018

Tuesday, July 31, 2018


          ஒப்பனை வார்த்தைகள்....



மிகவும் சாதாரண சொற்கள் தான்
நாம் அவற்றை கடன் கேட்க ஒரு மாதிரியும்,
கடன் வசூலிக்க ஒரு மாதிரியும்,
அன்பு காட்ட ஒரு மாதிரியும்,
கோபம் காட்ட ஒரு மாதிரியும்,
கொஞ்ச ஒரு மாதிரியும், இன்னும் பல வகையிலும் அவற்றை அலங்காரம்
செய்து அடுத்தவர்களிடம் அளிக்கிறோம்.

Monday, July 30, 2018


               வாழ்விலக்கியம்.....


யாரிடமும் சமாதானம் அடைந்து கொள்பவர்களையும்,
யாரிடமும் தோற்றுக் கொண்டே
இருப்பவர்களையும்,
யாரிடமும் எதையும் எதிர்பாரமல்
இருப்பவர்களையும்,
எதற்கும், எப்போதும் ஆசைப்படாமல்
இருப்பவர்களையும்,
வெறுப்பவர்களிடமும் அன்பு காட்டிக்
கொண்டிருப்பவர்களையும்,
தான் இந்த உலகம் மடிமேல் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்கிறது, நான் படித்த இலக்கியம் எனக்கு கற்றுத் தராதது.

Thursday, July 26, 2018


               நசுங்கும் வாழ்வு....



இந்த உலகம் பதில் தரமுடியாத பல
கேள்விகளின் குவியல்களாக இருக்கிறது.
அதனால் தானோ என்னவோ நம் வாழ்வை
வாழ்வதற்கே சில சமயம் அலுப்பாகவும், வெறுப்பாகவும், பயமாகவும் இருக்கிறது. நேற்று வாழ்வில் ஜெயித்தவர்கள்
இன்று எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. காலம் வேகம் எடுக்க நல்லவை, கெட்டவை என யாவும் மிதிபட்டு ஒன்றாகி விடுகின்றன.

Wednesday, July 25, 2018

 
                      அற்ப வாழ்வு.....



நம் கண்கள் அளவே இருந்த அந்த வண்ணத்துப்பூச்சி, அன்பின் இருக்கை தேடி அலைந்து கொண்டிருந்தது.
பல வனங்கள், பல காடுகள்,
பல ஆறுகள், பல நதிகள்,
பல மலைகள், பல பள்ளத்தாக்குகள்,
பல நகரங்கள், பல கிராமங்கள்,
பல குடும்பங்கள், இறுதியாய் ஒரே ஒரு ஒற்றை மனது என பார்த்து ஏங்கி தோல்வியுற்று உயர உயர பறந்த அந்த வண்ணத்துப் பூச்சி பற்றியெரியும் சூரியனிடம் சென்று சாம்பலாகிப்போனது.

Tuesday, July 24, 2018


                     நாள் மாற்றம்.....



இன்றைக்கு போலல்லாமல்
என்றைக்கும் உங்களுக்கு பிடித்தவனாகவே இருக்க விரும்புகிறேன்,
ஆனால் என்றைக்கும் இன்றைக்கு
போலல்லாமல் இருந்தால் மட்டுமே உங்களுக்கு என்னை பிடிக்கும்.
என்றைக்குமான நாட்களை முதலில் தக்கவைத்துக் கொள்வோம். இன்றைக்கான நாளை பிறகு என்றைக்காவது நாம் விரும்பும்படி மாற்றிக் கொள்வோம்.

Monday, July 23, 2018


          சொற்களின் வாழ்க்கை....



எங்கோ இருந்து பெருமழையாய்
பொழியும் சொற்களை நீங்கள்,
அழகூட்டி, நிறம் சேர்த்து, பாவனைகள் பழகி என யாவும் சேர்த்து இந்த
உலகில் உலவ விடுகிறீர்கள்,
இந்த உலகிற்கு என் சொற்கள் எப்போதும் தேவைப்படுவதில்லை, அது யார் சொற்களையும் கேட்காமல் நான் வளர்க்கும் கள்ளிச் செடிகளுக்கே உரமாகிறது.

Thursday, July 19, 2018


  ஆசைகளின் பிறப்பிடங்கள்....


நாம் நேசித்து இழந்ததை,
நாம் கற்க நினைத்து கற்காததை,
நாம் பெற நினைத்து பெறாததை,
நாம் செய்ய நினைத்து செய்யாததை,
என நம் நிறைவேறாத ஒரு வாழ்வை
நம் பிள்ளைகளின் மீது திணிப்பது
நம் வன்முறையே.....

Tuesday, July 17, 2018


             என்றைக்குமானவன்.....


தினம் சந்திக்கும் ஏமாற்றங்கள்,
தினம் தழுவும் தோல்விகள்,
தினம் படரும் கோபங்கள்,
தினம் வருடும் வருத்தங்கள்,
தினம் பெருகும் பொறாமைகள்
என யாவும் மொத்தமாய் அமிழ்ந்து விடுகின்றன,
உன் அன்பின் பெருமழையில்...

Monday, July 16, 2018


         நினைவின் சுவடுகளில்....


அனுபவத்தின் பெருவெளிகள் நமக்கு பால்யத்தில் மட்டுமே கிடைக்கின்றன.
சந்தோசம், ஏக்கம், படபடப்பு, அழுகை, சிரிப்பு, போட்டி, பொறாமை என சராசரி மனித இயல்புகள் யாவும் அப்பருவத்தில் தான் நம்மிடம் வந்தடைகின்றன.
பெரியவர்களின் மனதில் என்றைக்குமான புதுக்கவிதையாக எல்லோருக்கும் தங்கள் சிறார்பருவம் நிச்சயம் இருக்கும்.

Friday, July 13, 2018


                எனக்கானவை....


பசியோடு இரவெல்லாம் பயணம்,
கை, கால்கள் உணர்விழந்த நிலை,
லட்சத்திற்கும் மேற்பட்ட தலைகளோடு
கலந்து விடுகிறது, எங்கள் தலைகளும்.
ஊர்ந்து, தடுக்கி, தவழ்ந்து, காத்திருந்து
இறுதியாய் கண்டடைந்தோம்
உனக்கான கடவுளையும், அதில்
எனக்கான கலையையும்.
நீ கடவுளிடம் யாசித்துக் கொள்,
நான் கலையை ரசித்துக் கொள்கிறேன்.

Thursday, July 12, 2018


                வாழ்வின் அழகியல்



     காலை எழுந்து குளித்து முடித்து எல்லா ஒழுக்குகளுடனும் இந்த உலகிற்கு
நம் முகத்தை அறிமுகம் செய்து வைத்துக் கொள்கிறோம்.
ஏமாற்றுபவர்களை ஏமாற்றி,
பாராட்டுபவர்களை பாராட்டி,
சிரிப்பவர்களிடம் சிரித்து,
அழுபவர்களிடம் அழுது,
வேண்டுபவர்களிடம் வேண்டி
என நமக்கான காரியத்தை முடித்து
தற்காலிக இறப்பு எனும் இரவிற்குள்
அடைந்து கொள்கிறோம்.
தூய அன்பு தினம் பூத்து உதிரும் மலரைப்
போல எப்போதும் இருக்கிறது.

Tuesday, July 10, 2018


      உன் நினைவின் துளியாக....


யார் யாரோ,எப்பொழுதோ
வேண்டாமென்று வானத்தில்
வீசியெறிந்தவைகள் தான் இன்று
வானில் நட்சத்திரங்களாக ஒளிவீசிக்
கொண்டிருக்கின்றன.
எண்ணிலடங்கா அந்தப் புள்ளிகளில்
ஒரு புள்ளியாக நானும்
ஒளிர்விட்டுக் கொண்டிருக்கிறேன்
உன் நினைவின் சிறு துளியாக....

Monday, July 9, 2018


               சுயத்தை இழத்தல்....



இயல்பான கோபத்தை,
வெறுப்பை, நிராகரிப்பை, வேண்டுதலை, உரிமைகளை, மாற்றத்தை
என சராசரியான ஒருவனின் உணர்வுகளை இந்த சமூகம் சார்ந்து வாழ்பவர்கள் ஏற்றுக் கொள்வதேயில்லை. அதிகாரத்தாலும், அறிவுரைகளாலும், அவர்களை அவர்களாக இருக்க அனுமதிப்பதேயில்லை.
நம் இனத்தின் பெருஞ்சாபமும், பின்னடைவும் அதுவே.

Saturday, July 7, 2018

 
                      காட்சி உலகம்....



வேடிக்கை பார்ப்பவர்களின் உலகம்
விசித்திரங்களால் நிரம்பியது.
அவர்களின் மனம் முழுவதுமே அனுபவங்களால் நிரம்பிய அற்புதக் குவியல்.
விபத்து, அழுகை, சிரிப்பு, திருட்டு என அவர்கள் கண்முன்னே நடக்கும் அத்தனை சம்பவங்களும் அவர்களுக்கு வெறும் காட்சியே.
கடவுளுக்கும் அது பிடித்ததாலோ என்னவோ எப்போதும் இந்த உலகை
வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

Thursday, July 5, 2018


                 மிதக்கும் உலகம்.....



திரும்ப திரும்ப தோல்விகளை சந்திக்க
நேரிடும் நேரத்தில்,
மிதக்கும் மேகம் வரை கோபம்
கொப்பளிக்கும் கணத்தில்,
விளக்கங்கள் கொடுக்காமல் விலகிச்
செல்லும் விரக்தியான வினாடிகளில்,
எப்போதாவது வழியும் கண்ணீரை தானே துடைத்துக் கொள்ளும் தருணத்தில்,
"டாடி விளையாடலாமா"??? என மகன்
கேட்கும் பொழுது எனக்கான உலகத்தை சற்று வேறு பக்கம் திருப்பி விடுகிறான்.