Tuesday, July 31, 2018
Monday, July 30, 2018
வாழ்விலக்கியம்.....
யாரிடமும் சமாதானம் அடைந்து கொள்பவர்களையும்,
யாரிடமும் தோற்றுக் கொண்டே
இருப்பவர்களையும்,
யாரிடமும் எதையும் எதிர்பாரமல்
இருப்பவர்களையும்,
எதற்கும், எப்போதும் ஆசைப்படாமல்
இருப்பவர்களையும்,
வெறுப்பவர்களிடமும் அன்பு காட்டிக்
கொண்டிருப்பவர்களையும்,
தான் இந்த உலகம் மடிமேல் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்கிறது, நான் படித்த இலக்கியம் எனக்கு கற்றுத் தராதது.
Thursday, July 26, 2018
நசுங்கும் வாழ்வு....
இந்த உலகம் பதில் தரமுடியாத பல
கேள்விகளின் குவியல்களாக இருக்கிறது.
அதனால் தானோ என்னவோ நம் வாழ்வை
வாழ்வதற்கே சில சமயம் அலுப்பாகவும், வெறுப்பாகவும், பயமாகவும் இருக்கிறது. நேற்று வாழ்வில் ஜெயித்தவர்கள்
இன்று எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. காலம் வேகம் எடுக்க நல்லவை, கெட்டவை என யாவும் மிதிபட்டு ஒன்றாகி விடுகின்றன.
Wednesday, July 25, 2018
அற்ப வாழ்வு.....
நம் கண்கள் அளவே இருந்த அந்த வண்ணத்துப்பூச்சி, அன்பின் இருக்கை தேடி அலைந்து கொண்டிருந்தது.
பல வனங்கள், பல காடுகள்,
பல ஆறுகள், பல நதிகள்,
பல மலைகள், பல பள்ளத்தாக்குகள்,
பல நகரங்கள், பல கிராமங்கள்,
பல குடும்பங்கள், இறுதியாய் ஒரே ஒரு ஒற்றை மனது என பார்த்து ஏங்கி தோல்வியுற்று உயர உயர பறந்த அந்த வண்ணத்துப் பூச்சி பற்றியெரியும் சூரியனிடம் சென்று சாம்பலாகிப்போனது.
Tuesday, July 24, 2018
நாள் மாற்றம்.....
இன்றைக்கு போலல்லாமல்
என்றைக்கும் உங்களுக்கு பிடித்தவனாகவே இருக்க விரும்புகிறேன்,
ஆனால் என்றைக்கும் இன்றைக்கு
போலல்லாமல் இருந்தால் மட்டுமே உங்களுக்கு என்னை பிடிக்கும்.
என்றைக்குமான நாட்களை முதலில் தக்கவைத்துக் கொள்வோம். இன்றைக்கான நாளை பிறகு என்றைக்காவது நாம் விரும்பும்படி மாற்றிக் கொள்வோம்.
Monday, July 16, 2018
நினைவின் சுவடுகளில்....
அனுபவத்தின் பெருவெளிகள் நமக்கு பால்யத்தில் மட்டுமே கிடைக்கின்றன.
சந்தோசம், ஏக்கம், படபடப்பு, அழுகை, சிரிப்பு, போட்டி, பொறாமை என சராசரி மனித இயல்புகள் யாவும் அப்பருவத்தில் தான் நம்மிடம் வந்தடைகின்றன.
பெரியவர்களின் மனதில் என்றைக்குமான புதுக்கவிதையாக எல்லோருக்கும் தங்கள் சிறார்பருவம் நிச்சயம் இருக்கும்.
Friday, July 13, 2018
எனக்கானவை....
பசியோடு இரவெல்லாம் பயணம்,
கை, கால்கள் உணர்விழந்த நிலை,
லட்சத்திற்கும் மேற்பட்ட தலைகளோடு
கலந்து விடுகிறது, எங்கள் தலைகளும்.
ஊர்ந்து, தடுக்கி, தவழ்ந்து, காத்திருந்து
இறுதியாய் கண்டடைந்தோம்
உனக்கான கடவுளையும், அதில்
எனக்கான கலையையும்.
நீ கடவுளிடம் யாசித்துக் கொள்,
நான் கலையை ரசித்துக் கொள்கிறேன்.
Thursday, July 12, 2018
வாழ்வின் அழகியல்
காலை எழுந்து குளித்து முடித்து எல்லா ஒழுக்குகளுடனும் இந்த உலகிற்கு
நம் முகத்தை அறிமுகம் செய்து வைத்துக் கொள்கிறோம்.
ஏமாற்றுபவர்களை ஏமாற்றி,
பாராட்டுபவர்களை பாராட்டி,
சிரிப்பவர்களிடம் சிரித்து,
அழுபவர்களிடம் அழுது,
வேண்டுபவர்களிடம் வேண்டி
என நமக்கான காரியத்தை முடித்து
தற்காலிக இறப்பு எனும் இரவிற்குள்
அடைந்து கொள்கிறோம்.
தூய அன்பு தினம் பூத்து உதிரும் மலரைப்
போல எப்போதும் இருக்கிறது.
Monday, July 9, 2018
சுயத்தை இழத்தல்....
இயல்பான கோபத்தை,
வெறுப்பை, நிராகரிப்பை, வேண்டுதலை, உரிமைகளை, மாற்றத்தை
என சராசரியான ஒருவனின் உணர்வுகளை இந்த சமூகம் சார்ந்து வாழ்பவர்கள் ஏற்றுக் கொள்வதேயில்லை. அதிகாரத்தாலும், அறிவுரைகளாலும், அவர்களை அவர்களாக இருக்க அனுமதிப்பதேயில்லை.
நம் இனத்தின் பெருஞ்சாபமும், பின்னடைவும் அதுவே.
Saturday, July 7, 2018
காட்சி உலகம்....
வேடிக்கை பார்ப்பவர்களின் உலகம்
விசித்திரங்களால் நிரம்பியது.
அவர்களின் மனம் முழுவதுமே அனுபவங்களால் நிரம்பிய அற்புதக் குவியல்.
விபத்து, அழுகை, சிரிப்பு, திருட்டு என அவர்கள் கண்முன்னே நடக்கும் அத்தனை சம்பவங்களும் அவர்களுக்கு வெறும் காட்சியே.
கடவுளுக்கும் அது பிடித்ததாலோ என்னவோ எப்போதும் இந்த உலகை
வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார்.
Thursday, July 5, 2018
மிதக்கும் உலகம்.....
திரும்ப திரும்ப தோல்விகளை சந்திக்க
நேரிடும் நேரத்தில்,
மிதக்கும் மேகம் வரை கோபம்
கொப்பளிக்கும் கணத்தில்,
விளக்கங்கள் கொடுக்காமல் விலகிச்
செல்லும் விரக்தியான வினாடிகளில்,
எப்போதாவது வழியும் கண்ணீரை தானே துடைத்துக் கொள்ளும் தருணத்தில்,
"டாடி விளையாடலாமா"??? என மகன்
கேட்கும் பொழுது எனக்கான உலகத்தை சற்று வேறு பக்கம் திருப்பி விடுகிறான்.
Tuesday, July 3, 2018
ஒரு வீடும் அதன் விருந்தாளிகளும்...
அவர்களுக்கு மிகவும் பிடித்தமானவர்கள்
வீட்டிற்கு வருகிறார்கள்,
அக்கணம் அவர்கள் அவர்களாக அல்லாமல் அந்த பிடித்தவர்களைப் போலவே மாறி வீட்டையும் மாற்ற
நினைக்கிறார்கள். பிறகு....
அவர்களுக்கு மிகவும் பிடிக்காதவர்கள்
வீட்டிற்கு வருகிறார்கள்,
அக்கணமும் அவர்கள் அவர்களாக
அல்லாமல் அந்த பிடிக்காதவர்களுக்கான
வீடாய் மாற்ற நினைக்கிறார்கள்.
எல்லாம் முடிந்த பிறகு இறுதியில்....
வீடு என்றும் வீடாய் மட்டுமே இருக்கிறது.
Sunday, July 1, 2018
வெந்து தணிந்தது....
எத்தனையோ முறை அடிக்க முயற்சித்து நொடிப்பொழுதில் பறந்து சென்றிருக்கின்றன,
என்னை கடித்த கொசுக்கள்.
ஆனால் அன்று அப்படியொன்றும் அதை அடிக்க முயற்சிக்கவேயில்லை,
கைகள் மீது அமர்ந்த சில வினாடிகளில்
லேசாய் தட்டிய மறுகணம் பாதி உயிர் பிரிந்தது, பின்பு சிறுக சிறுக. ஆனால்
இறக்கும் வரை அதன் கோபமும், பசியும் அடங்கவேயில்லை.
Subscribe to:
Posts (Atom)